Sunday, November 6, 2016

சிறுகதை உத்திகள் 01.

சிறுகதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி (செப் 2016)
(இலக்கிய வேல், அக் 2016)

முன்னுரை

ழுதுவோர் பலருக்கும் சிறுகதை எழுதும் ஆர்வம் இருப்பதால் சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் ஏதோ பெரிய எழுத்தாளன், கணக்கற்ற சிறுகதைகள் படித்து அவற்றை விமரிசன நோக்கில் ஆராய்ந்தவன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, நான் படித்தவற்றை, உத்திகள் பற்றி என் மனதில் ஆராய்ந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்தச் சிறுநூலின் நோக்கம்.

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வரலாறு, போக்குகள், இன்றைய நிலை இவற்றை ஆராய்வதோ, ஒரு சிறுகதை எழுதுவது எப்படி என்று சொல்லித் தருவதோ என் நோக்கமில்லை. ஒரு மரபுச் சிறுகதையில் உள்ள கூறுகள் என்ன, அவற்றை எழுதுவதில் பயன்படும் உத்திகள் என்ன என்பனவற்றை அலசுவதே என் நோக்கம்.

சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி. ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் கதைகளைப் படித்து, ஒரு கதாசிரியர் பார்வையில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை, எண்ணங்களை ஆராயுங்கள்.

தி.ஜானகிராமன்
குழந்தைக்கு ஜுரம்
இன்னொரு

சிலிர்ப்பு
இன்னொரு
*** *** ***

01. சிறுகதை என்பது

சின்னதாக அமையும் கதைகளில் பல ரகங்கள் உள்ளன.
  • சொந்த அனுபவங்களை டயரி-யில் பதிப்பதோர் கதை.
  • பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வருணிப்பது கதை.
  • குழந்தைகள் பேசுவதே ஒரு கதை.
  • அறவழி நிற்க எழுதப்படும் நீதிக் கதைகள் ஒரு வகை.
  • செய்தித்தாள் மற்றும் பிற ஊடகங்களின் செய்திகளில் உள்ள கதைகள்.
  • இன்னும் காதலன்-காதலி பேச்சு, நண்பர்கள் அரட்டை போன்ற பல சமாசாரங்களில் கதைகளுக்குப் பஞ்சமில்லை.
இது போன்ற சின்னக் கதைகளுக்கும் ஒரு சிறுகதைக்கும் என்ன வேறுபாடு?

ஒரு கதை என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகளின் நிரல் என்றால்,

ஒரு சிறுகதை என்பது கதை நிகழ்வுகளை ஓர் ஒழுங்கில் அமைத்து,

சொல்ல வந்த கதை கேட்பவருக்கு அல்லது வாசகருக்கு சுவாரஸ்யமாகவோ,

மகிழ்வூட்டுவதாகவோ அல்லது அறிவுறுத்துவதாகவோ அமைந்து

முடிவில் ஒருமித்த ஓர் உணர்வைத் தருமாறு செய்வதாகும்.

சிறுகதை ஆகாத இலக்கிய வடிவங்கள்

பத்து பக்கங்களுக்குள் அமையும் குறுநாவல் ஒன்று சிறுகதையாக முடியுமா? ஒரு கவிதை? ஒரு சம்பவத்தை அப்படியே வருணித்தல்? ஒரு காட்சி வருணனை? ஒரு வாழ்க்கைச் சரிதம்? நீதிக்கதை? இவையெல்லாம் சிறுகதை ஆகா. ஏனெனில்
  • ஒரு நாவல் வாசகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உணர்வுகளைத் தருவதாகும். நாவலில் பலதரப்பட்ட கதை மாந்தர்கள், சம்பவங்கள், கிளைக்கதைகள் இருக்கலாம். இவையெல்லாம் சிறுகதையில் கூடாது.
  • ஒரு கவிதையில் கதையிருந்தாலும் அதன் நோக்கம், வடிவமைப்பு இவற்றால் அது சிறுகதை யாகாது. எனினும், இன்றைய சின்னஞ்சிறு கதைகளில் கவிதையின் சில கூறுகளைக் காணலாம்.
  • ஒரு சம்பவத்தை வைத்துச் சிறுகதை எழுதலாம். ஆனால் பொதுவாக நாம் பேச்சிலோ எழுத்திலோ விவரிக்கும் சம்பவங்கள் சிறுகதை ஒழுங்கில் அமைவதில்லை என்பதால் ஒரு சம்பவத்தை உள்ளபடிச் சொல்லுவது தன்னளவில் சிறுகதை யாகாது.
  • சிறுகதையில் வருணனை அளவோடு அமைவதால் ஒரு காட்சியை விவரமாக வருணிப்பது தன்னளவில் சிறுகதை யாகாது.
  • பிறப்பு முதல் மரணம் வரை ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுவது சிறுகதை யாகாது. ஏனெனில் சிறுகதையில் ஒரு முக்கிய சம்பவம், ஓரிரு கதைப்பாத்திரங்கள் மட்டுமே.
  • பொதுவாக நீதிக் கதைகளின் இறுதியில் வெளிப்படையான சொற்களில் கதையின் நீதி சொல்லப்படுவதால் இவை சிறுகதை ஆகா. சிறுகதையின் செய்தி வலிந்து சொல்வதாக அல்லாமல் தானே எழுவதாக அமையவேண்டும்.

எப்படிச் சொன்னால் சிறுகதை யாகும்?

சிறுகதை என்ற பெயரே அதில் ஒரு கதை இருப்பதைக் காட்டுகிறது. அந்தக் கதையை எப்படிச் சொன்னால் அது சிறுகதை யாகும்?
  • ஒரு முக்கிய நிகழ்வு
  • ஒரு முக்கிய கதைப்பாத்திரம்
  • கற்பனை
  • கதைத் திட்டம் (plot)
  • கதைச் சுருக்கம்
  • கதை அமைப்பு
  • ஒருமித்த ஓர் உணர்வு
இவை யாவும் ஒருங்கே அமைந்த கதையே ஒரு சிறுகதை யாகும். இவற்றைச் சேர்த்தால் ஒரு சிறுகதையின் மேற்சொன்ன வரையறை இப்படி மாறும்:

ஒரு சிறுகதை என்பது, சுருக்கமான கற்பனைக் கதையாக, ஒரு முக்கிய நிகழ்வை,

ஒரு முக்கிய கதைப்பாத்திரம் மூலம், திட்டமிட்ட கதை ஒழுங்கில், அழுத்தமான, ஒருமித்த,

ஓர் உணர்வைத் தந்து, வாசகருக்கு சுவாரஸ்யமாகவோ, மிகிழ்வூட்டுவதாகவோ அல்லது

அறிவுறுத்துவதாகவோ அமையுமாறு எழுதப்படும் உரைநடை இலக்கிய வகையாகும்.

சிறுகதையும் நடைமுறை வாழ்வும்

சிறுகதைக்கும் நடைமுறை வாழ்வின் நிகழ்வுகளுக்கும் வேறுபாடு என்னவென்றால்,
  • வாழ்வின் நிகழ்வுகள் திட்டமிட்டோ, தற்செயலாகவோ, எதிர்பார்த்தோ, எதிர்பாராத விதமாகவோ தோன்றுகின்றன.
  • இதனால் வாழ்வின் நிகழ்வுகளில் அவற்றின் முடிவு பற்றித் திருப்தியோ அதிருப்தியோ உண்டாகிறது.
  • சிறுகதையின் நிகழ்வுகள் ஒரு நோக்கத்துடன் அமைகின்றன.
  • இதனால் சிறுகதையைப் படிப்பதில் அதன் முடிவு பற்றிய ஒரு திருப்தி உண்டாகிறது.

சிறுகதையின் நோக்கமும் செய்தியும்

ஒரு சிறுகதையின் இலக்கு மேற்சொன்னவாறு வாசகரைக் கவருவதாகவோ, மகிழ்வூட்டுவதாகவோ அல்லது அறிவுறுத்துவதாகவோ அமைவதாகும். அப்படி அமைக்கும் போது கதாசிரியர் ஒரு செய்தி அல்லது படிப்பினையைத் தெரிவிக்க விரும்பினால் அந்தச் செய்தி அல்லது படிப்பினை நேரடியான வார்த்தைகளில் சொல்லப் படாமல் கதையின் போக்கிலிருந்து தானே மௌனமாக எழுவதாக இருக்க வேண்டும். இல்லையேல் சொல்ல வந்தது சிறுகதையாக அல்லாமல் நீதிக் கதையாகிவிடும்.

சிறுகதையின் நீளம்

ஒரு சிறுகதை எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் என்பதற்குத் தகுந்ததோர் விளக்கமாக அது ஒரே மூச்சில் படிக்க முடிவதாக இருக்கவேண்டும் என்பதைக் கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் சிறுகதை இலக்கியம் அறிமுகமான போது வெளிவந்த கதைகளின் நீளம் 20,000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தன. பொதுவாகப் பத்திரிகைகளில் வெளிவரும் ஆங்கிலச் சிறுகதைகள் 2,000 முதல் 5,000 வார்த்தைகள் வரையும், எப்படியும் 10,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருந்தன.

இணையத்தின் தாக்கத்தில் ஏராளமான தனிமனித வலைதளங்கள், வலைப்பூக்கள் இணையக் குழுமங்கள், மின் பத்திரிகைகள் பெருகியுள்ள இந்நாளில் short story என்னும் ஆங்கிலச் சிறுகதையானது short-short story என்று சுருங்கிவிட்டதில், இத்தகைய சின்னஞ் சிறுகதைகளின் உச்ச நீளம் 600-1500 வார்த்தைகளுக்குள் அமைகிறது. 55 அல்லது 69 வார்த்தைகளில் சொல்லப்படும் கதைகளும் நிறைய உண்டு.

தமிழில் இத்தகைய சின்னஞ்சிறு கதைகள், ஒரு பக்கக் கதை, ஒரு நிமிடக் கதை போன்ற பெயர்களில் இன்றைய புகழ்பெற்ற ஜனரஞ்சகப் பத்திரிககளில் வெளிவருகின்றன. இவற்றில் சிறுகதையின் கூறுகள் முழுமையாகவோ, சில மட்டுமோ அமைவன. இவற்றை எழுதும் உத்திகளைப் பின்னொரு இயலில் காணலாம்.

முன்னாட்களில் புகழ்பெற்ற தமிழ்ப் பத்திரிகைகள் ஒரு சிறுகதைக்கு அச்சில் பக்கத்துக்கு இரண்டு நெடுவரிசை வீதம் ஏழு முதல் எட்டு பக்கங்கள் வரை அனுமதித்தன. ஒரு நெடுவரிசையைக் கையெழுத்தாக எழுதினால் பொதுவாக A4-தாள் அளவு அமையும். இதனால் ஒரு சிறுகதையை 14-16 முழுத் தாள்களில் எழுத முடிந்தது.

பின்னர் இந்த அளவு 5-6 அச்சுப் பக்கமாகச் சுருங்கியது. ஒரே நெடுவரிசைப் பக்கம் என்றால், சிறுகதையின் இந்த நீளம் கையெழுத்தில் 8-9 பக்கங்களுக்குள் அமையும். இணையப் பதிப்புகளில் வரும் கதைகள் மின்னச்சில் இன்று பொதுவாக 5-6 A4-தாள்களில் அமைவன.

தொண்ணூறு சதவிகிதம் சினிமாவும் அரசியலும் வணிகமும் ஆளும் இன்றைய ஜனரஞ்சகப் தமிழ்ப் பத்திரிகை உலகில் சிறுகதை பெரும்பாலும் செத்துவிட்டது எனலாம். வெளியிடும் கதைகளின் எண்ணிக்கையைக் கூட்ட, இந்தப் பத்திரிகைகள் இன்று ஒரு பக்கக் கதை-களையே வெளியிடுகின்றன. ஒரு பக்கத்தில் ஒரு சின்னஞ்சிறு கதை, அது சிறுகதை யாகுமாறு எழுத முடியும். ஆனால் இன்று வரும் பெரும்பாலான கதைகள் இந்த அந்தஸ்தைப் பெறுவதில்லை. அதைப் பற்றிப் பத்திரிகை ஆசிரியர்களும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. கணையாழி போன்ற சில பத்திரிகைகள் மட்டும் இன்னும் சிறுகதையை அதற்குரிய வடிவில் வெளியிடுகின்றன.

சிறுகதைக் கரு

ஒரு சிறுகதை எழுதுவதற்கான கரு எங்கிருந்து, எப்படிக் கிடைக்கிறது, அதற்கான களம் எது என்றால், இன்றைய நாகரிக வாழ்வில் நாம் தினமும் காணும் எல்லா விதமான நிகழ்வுகள், இடங்கள், கணங்களில் எதுவும் ஓர் ஆசிரியர் மனதில் கதைக்கருவாக உருவாகலாம். எனினும் கதைக்கரு என்பதே கதையாகிவிடாது. அதற்கு ஆசிரியர் களம்-காலம்-கதைமாந்தர் கொடுத்து, ஒருமித்த ஓர் ஒழுங்கில் வளர்க்கும் போது ஒரு சிறுகதை எழ வாய்ப்புண்டு. கீழ்வரும் களங்களும் முயற்சிகளும் கதைக்கரு உருவாக உதவலாம்.
  • இயற்கை அழகு, வளமை, உயிர்கள், நிகழ்வுகள், உறவுகள்
  • தின வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், இடங்கள்
  • ஒரு புகைப்படத்தை ஆராய்தல்
  • செய்தித்தாளில் உள்ள ஒரு குறுஞ்செய்தி
  • தன்னைப் பற்றி ஆராய்வது: பிடித்தது, முயன்றது, பயந்தது போன்ற அனுபவங்கள்
  • மற்றவர்கள் கதைகளைப் படிக்கும் போது வரும் எண்ணங்கள்
  • கனவுகளில் வருவனவற்றை ஆராய்தல்
  • நகைச்சுவை மற்றும் பிறவகைத் துணுக்குகளை விரித்தல்
  • அரசியல், சமூகம், தொழில்துறை நிகழ்வுகள்
  • அதீத கற்பனை (fantasy)
உலகிலுள்ள அனைத்துக் கலாசாரங்களிலும் உலவும் பழங்கதைகள், நிகழ்வுகள், மழலையர் பாடல்கள் யாவும் இந்தக் கடலில் இருந்தே எழுந்தன என்று ஆய்வுகள் சொல்லும் மிகப் பெரிய நூலான சோமதேவ பட்டரின் கதாசரித்-சாகரம் ஒரு சிறந்த கதைக்கருக் களனாகும். இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்குத் தரவிறக்கலாம்:
Ocean of the streams of story
(சமஸ்கிருத மூலம்)

நிறையப் பார்த்து, அனுபவைத்து, படித்து, சிந்திக்கும் போது கதைக்கரு என்னும் வித்தானது மனதில் தானே விழும். அப்படியோர் வித்து விழுந்ததாகத் தோன்றும் போது உடனே அதை செயற்கையாக வளர்த்துக் கதையாக்க முனைதல் கூடாது. கதைக்கருவாகும் எண்ணம் மனதில் நன்றாக ஊறவேண்டும். எழுத முனையும் கதை பற்றிய நோக்கம், செய்தி, பார்வை போன்றவற்றை அந்த வித்து ஒரு மணிக்கல் போல் தெளிவாகப் பிரதிபலிக்கும் போது, கதைக்கேற்ற முக்கிய பாத்திரமும் சம்பவமும் மனதில் உருவாகிக் கதையைத் திருப்தியாக எழுத முடியும்.
*** *** ***

No comments:

Post a Comment