Sunday, January 22, 2017

சிறுகதை உத்திகள் 04.

சிறுகதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி
(இலக்கிய வேல், ஜன. 2017)

04. உச்ச நெருக்கடி

ரு சிறுகதையின் மூன்று அடிப்படைக் கூறுகளில் இரண்டாவதான உச்ச நெருக்கடி என்பது என்னவென்று இரண்டாம் இயலில் பார்த்தோம். அதாவது:

முரண்பாட்டைத் தீர்க்கக் கதையின் முக்கிய பாத்திரம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், செய்யும் காரியங்கள், பிற நிகழ்வுகள் போன்றவை அதை ஓர் உச்ச நெருக்கடியை நோக்கிச் செலுத்துகின்றன. கதையின் இறுதிப் பகுதியில் வரும் இந்த உச்ச நெருக்கடி

  • இதுவரை கதையில் வந்த நிகழ்வுகள், விளைவுகள் இவற்றின் உச்சி நிகழ்வாக அமையும்.
  • கதையில் ஒரு திருப்பமாக அமையும்.
  • கதையின் முக்கிய பாத்திரம் இனி முன்னிருந்த தன் நிலைக்குச் செல்ல முடியாதவாறு அமையும்.
  • இனி என்னவாகுமோ என்ற உணர்வை வாசகரிடம் ஏற்படுத்தும்.
  • இனி வருவன கதையின் முடிவை நோக்கி வீழும் நிகழ்வுகளாக அமையும்.
  • இதன் பின் சிறுகதை சட்டென்று முடிவதாக இருக்கும். அதாவது,

இந்த உச்ச நெருக்கடி

  • முக்கிய பாத்திரம் மேற்கொள்ளும் செயல்களின் விளைவாக இருக்கலாம்.
  • வெளியிலிருந்து வருவதாக இருக்கலாம்,
  • அல்லது மனதில் நிகழ்வதாக இருக்கலாம்.
  • எப்படியாயினும் இது இயல்பாக நிகழ வேண்டும், கதாசிரியர் திணித்ததாக இருக்கக் கூடாது.

கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் உடாடிச் செயல்படுவதன் விளைவாக இது நிகழ வேண்டும். சில சமயங்களில் இது இயற்கையால்/கடவுளால் ஏற்படுத்தப் பட்டதாக இருக்கலாம், ஆனால் அப்போதும் அது இயல்பாக நிகழ வேண்டும்.

இயல்பாக என்றால் இப்படி நிகழ்ந்தது நியாயமே அல்லது தவிர்க்க முடியாததே என்ற எண்ணத்தை, உணர்வை கதையின் முக்கிய பாத்திரத்திடமும் வாசகர் மனதிலும் தோன்றச் செய்வது.

உச்ச நெருக்கடி உதாரணங்கள்

சிறுகதையின் முதல் மூலக்கூறான முரண்பாடு பற்றி மேலே கண்ட உதாரணக் கதைகளில் இரண்டாவது மூலக்கூறான உச்ச நெருக்கடி எவ்வாறு அமைந்துள்ளது என்று பார்க்கலாம்.

அதிர்வு
தி. ஜானகிராமன்

’அப்பாடா!’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டே அவர் கரத்தைப் பற்றினாள். என்ன இது!

கரத்தைச் சற்று அழுத்திப் பற்றிப் பார்த்தாள்.

...

பிருபிருவென்று அந்தக் கரம் வேகமாக அதிர்ந்துகொண்டிருந்தது. கண்ணால் உற்றுப் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. சாதாரணமாக இருந்தது. ஆனால் உள்ளுக்குள்ளே அதே அதிர்வு. புஜத்தைத் தொட்டாள். ஆமாம்! கணுக்காலைத் தொட்டாள். பிடரியைத் தொட்டாள். முதுகைத் தொட்டாள். தொட்ட இடமெல்லாம் படபடவென்று அதிர்ந்துகொண்டேயிருந்தது. நான்கைந்து விநாடிகளுக்கு மேல் பொறுக்க முடியாமல் கை தானாகத் தொட்ட இடத்தினின்று மீண்டது. ஆனால் மீண்டும் தொடும் ஆசை உந்தியது.

...

கருவூர்த்தேவர் அவளைப் பார்த்தார்.

"என்ன இது?" என்றாள் அவள்.

"கிணற்று நீரை வெள்ளம் கொண்டுபோய் விட்டது."

...

"என் ஊடலையும் உயிரையும் தொட்ட மாத்திரத்தில் உலுக்கின அந்த அதிர்வு?"

"ரத்த ஓட்டமில்லை, எல்லையில்லாத வடிவத்தின் ஒரு சிறிய புள்ளியைக் கண்ட அதிர்ச்சி."

வழி தெரியவில்லை!
சுஜாதா

"கடைசி வண்டி போய்டுமே? உன்னால நடந்து போக முடியாது. வா, நான் குறுக்கு வழில போறேன், ஏறு. 12 அணா கொடு. ஒரே மிதியா மிதிக்கிறேன்."

...

அவன் என்னை எங்கு அழைத்துச் செல்கிறான்?

சற்று நேரத்தில் எனக்குத் தெரிய வந்தது. ஒரு வீட்டின் எதிரே ரிக்ஷாவை நிறுத்தினான். இறங்கிவிட்டான். ரிக்ஷாவின் முன் பக்கத்தின் விளக்கை ஊதி அணைத்தான்.

...

கதவு பாதி திறந்திருந்தது. அவள் என்னிடம் "வாங்க" என்றாள்.

"என்னப்பா?" என்றேன் சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த நான். எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை. தொண்டை அடைத்திருந்தது.

"சும்மா போ! அட!" என்றான்.

சுமைதாங்கி
ஜெயகாந்தன்

"பாவி! ஒரு குழந்தையைப் பெத்துக் கொஞ்சறத்துக்குத்தான் பாக்கியம் செய்யாத மலடி ஆயிட்டேன், செத்துப்போன ஒரு குழந்தைக்கு அழக்கூட எனக்குச் சொந்தமில்லையா?" என்று திமிறிய அவளை வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்றான் போலீஸ்காரன்.

அந்தத் தெருக்கோடியில் உள்ள தன் வீட்டருகே மனைவியை அழைத்து வரும்போது, தூரத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து அந்த ’டைம்பாம்’ வெடித்தது! போலீஸ்காரன் காதுகளை மூடிக் கொண்டான். "ஐயோ! என் ராசா!" என்று காலனியில் ஒலித்த அதே குரல் வீதியே அதிர வெடித்தெழுந்தபோது, தன் பிடியிலிருந்து திமிறியோட முயன்ற மனைவியை இரு கைகளிலும் ஏந்தித் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் போலீஸ்காரன்.

நாடியது கேட்கின்...
குருநாதன் ரமணி

யஜமானர் தந்த விவரங்களை எடுத்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தோம். மனோவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனக்குச் சொல்லப்பட்ட பலன்களை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் மீதமுள்ள சாந்திக்காண்டத்தை சாளுக்கிய தேசத்தில் பார்த்துவிடத் தீர்மானித்து, அடுத்த மாதமே இருவரும் இன்டர்-ஸ்டேட் சொகுசுப் பேருந்தில் கிளம்பினோம்.

என்ன சொல்வது? பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் எங்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, என் அருமை நண்பன் மனோ உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே என் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "மூத்துவேலா!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த நான் காயங்களுடன் தப்பினேன்.

மனோவின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நான் விவரங்களை எடுத்துக்கொண்டு அந்த தம்பி ஜோதிடரிடம் சென்றேன்.

உயிர்
கந்தர்வன்

இன்னும் ஐம்பது அடிதூரம் இருக்கையில் அவர்கள் கண்முன்னே அந்தப் பிரதேசமே நடுங்கும்படி அது நிகழ்ந்து கொண்டிருந்தது. ரத்தம் ஒழுகியவாறும் மூச்சு விடவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த திமிங்கலம் சரேலென்று உதறிக்கொண்டு வெகு உயரத்திற்கு எழுந்தது. திமிங்கலத்தின் முதுகில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் சிதறி விழுந்துகரை நோக்கி நீந்தியும் ஓடியும் வந்தார்கள். படகுகள் கவிழ்ந்துவிட்டன. படகுக்காரர்கள் கரை நோக்கி நீந்தினார்கள். படகுகளைப் போட்டுவிட்டு படகுகளில் திமிங்கல முதுகில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்காகக் காத்திருந்த பெற்றோர்கள் பதறியபடி கடலுக்குள் விழுந்து கரைக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
புதுமைப்பித்தன்

சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.

மயான ருத்திரனாம் - இவன்
மயான ருத்திரனாம்!

கதவுகள் திறந்தன.

கடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.

மறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோ ட, காலைத் தூக்கினார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.

"ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும்."

சதுப்பு நிலம்
எம்.ஏ. நுஃமான்

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். நாலரை மணி. ஐந்து மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் நிற்கவேண்டும். அவனுடைய சகோதரிக்கு நேற்று ஓப்பரேஷன் நடந்தது. அவளைப் பார்ப்பதற்காகத்தான் கல்முனையில் இருந்து காலையில் வந்தான். ஆறேகால் கல்லோயா எக்ஸ்பிரசில் திரும்பிப் போகவேண்டும். அவன் எழுந்து கீழே சென்றான். அவளும் தோழிகளும் பள்ளிவாசல் வாகையின்கீழ் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிற்கும்போது அவன் அவர்களைக் கடந்துபோக விரும்பவில்லை. இப்போது போனால், `தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இவன் வருகிறான்’ என்று ஒருவேளை அந்தப் பெட்டைகள் நினைக்கக்கூடும் என்று அவன் எண்ணினான்.

வாசிகசாலைக்கு வெளியே நாட்டி இருந்த விளம்பரப் பலகையை வாசிக்கத் தொடங்கினான்.

காடன் கண்டது
பிரமிள்

இப்ப பாத்தமே, அந்த ஆளு? அவனும் இன்னும் நாலஞ்சு பேருமா டீக்கடையை தூள் பண்ணிட்டாங்க. டீக்கடைக்காரப் பயகிட்ட சும்மா, ஏண்டா பச்சை லுங்கி கட்டின ஆளு இங்கே ராவிலே வந்து போறானே எங்கேடா பகல் வேளைக்குப் போறான்னு, சும்மா கேட்டான் இந்த ஆளு. அதுலேர்ந்து அரைமணி நேரமா டீக்கடைக்காரன்கிட்டே கேள்வி. டீக்கடைக்காரன் ஒம்பது பச்சை லுங்கிகாரனுக அட்ரஸு குடுக்கான். இந்தா வா, இந்தா வான்னு பதிலு குடுத்து எருமைக் குட்டைக்கு இட்டுக்குனு போகுது பேச்சு. இந்த ஆளு திடீர்னு டீக்கடைக்காரனை இழுத்து தெருவிலே தள்ளி அறைஞ்சான் பாரு. அதுக்கு அப்புறம் பதிலே வல்லே. பேசுடா பேசுடான்னு டீக்கடையை முடிச்சு, ’இதுதாடா உனக்கு கடைசி ஓணம்’னு அவனை மிதிபோட்டு மிதிச்சாங்க. சின்னப் பயல், டீக்கடைக்காரன். என்னா அமுத்தல்ங்கறே. ஆளுங்க போனப்புறம் ஆரோ டீக்கடைக்காரனை சைக்கிள்ளே ஏத்திக்கினு போனாங்க. ராத்திரி நான் வேளை கழிச்சுத்தான் மரத்தடிக்கு வந்தேன். ரெண்டு ராவா பக்கத்தூரு போன நம்ப கூட்டமும் இல்லே. கண்ணு சொக்கறப்போ, காலடிலே இருட்டு பிச்சுக்கிட்டு வந்து நின்னு, ஆளுயர தடிக் கம்பாலே என் காலைத் தொட்டு, ’பத்திரம் எவ்வளோ இருக்கு?’ங்குது.

ஜில்லு
சுஜாதா

"ஆத்மா வலிக்கிறதா?" என்றாள் நித்யா.ஏகப்பட்ட ஜனங்கள் அடைந்திருந்தார்கள். நித்யாவும் ஆத்மாவும் ஒரு ஓரத்தில் பதிய நின்று கொணடு மேலே கிடைத்ததைப் பற்றிக் கொள்ள ஹெலிகாப்டர் மேலே மேலே செல்ல,வயிற்றுக்குள் பயப்பந்து சுருட்டிக் கொள்ள "குமார் நாம் ஊருக்குப் போனதும் வேற நாய் வாங்கிக்கலாம்" என்றான் ஆத்மா.

"குமார்?"

"ஏய் குமார்! நித்யா குமார் எங்கே?"

"உங்க கூடத்தானே இருந்தான்"

"இல்லையே உன் கையைன்னா பிடிச்சிட்டிருந்தான்"

"குமார் ? குமார்! குமா ஆ‌ஆ‌ஆ‌ஆ ர்!"

நித்யாவின் அலறல் அந்த மெஷின் படபடப்பில் கரைந்தது.

*** *** ***

Monday, January 16, 2017

சிறுகதை உத்திகள் 03.

சிறுகதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி
(இலக்கிய வேல், டிச. 2016)

03. சிறுகதையில் முரண்பாடு

ரு சிறுகதையின் மூன்று அடிப்படைக் கூறுகளில் முதலாவதான முரண்பாடு என்பது என்னவென்று இரண்டாம் இயலில் பார்த்தோம். அதாவது:

முரண்பாடு என்பது வேறொன்றுமில்லை:

  • கதையின் முக்கிய பாத்திரம் தான் இப்போது இருக்கும் நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்காக, ஒன்றை எதிர்பார்ப்புடன் விழைந்து செயல்படத் தொடங்க, அந்த மீட்சி நிகழ, நிகழலாமலிருக்க, சாத்தியக் கூறுகள் இருப்பதுதான்.
  • அந்த விழைவும் செயல்பாடும் பொதுவாக, வன்முறை சார்ந்ததாகவோ பகட்டாகவோ இருக்க வேண்டுவதில்லை. மிகவும் எளியதாகக் கூட இருக்கலாம்.
  • விழைவின் திண்மையும் செயல்பாடுமே முக்கியம்.

முரண்பாடு உதாரணங்கள்

அதிர்வு
தி. ஜானகிராமன்

பள்ளிகொண்ட ரங்கநாதனை யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை. கோவிலுக்கு வந்த அத்தனை பேரும் தூணோரமாக அமர்ந்திருந்த மனிதனை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். நெடுஞ்சாண்கிடையாக அவன் முன் விழுந்து எழுந்தார்கள். எழுந்து அங்கேயே நின்றார்கள்.

...

விலகுமோ என்று கூட்டத்தின் வெளி வட்டத்தின் அருகே சற்று நின்றாள். அவளைத் திரும்பிப் பார்த்தவர்கள் ஏதோ கல்லை மண்ணைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டார்கள். செங்கமலத்துக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அவளைப் பார்த்து எந்தக் கண் இரண்டாம் தடவை அவளைத் திரும்பிப் பார்க்காமல் இருந்தது?

வழி தெரியவில்லை!
சுஜாதா

ஆனால், இந்தக் கதை அந்த சினிமாவைப் பற்றியது அல்லவே. சினிமா பார்த்துவிட்டு நான் ஸ்டேஷனுக்குத் திரும்பியபோது, எனக்கு ஏற்பட்ட விநோத அனுபவத்தைப் பற்றியது. படம் சற்று நீளமான படம். முடிந்து திரும்பும்போது, எனக்கு நல்ல பசி. கடைசி ரயிலைத் தவறிவிடப் போகிறேனே என்கிற கவலை. மாம்பலத்துக்குப் போய்ச் சப்பாத்தி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று வேகமாக நடந்தேன்.

சுமைதாங்கி
ஜெயகாந்தன்

காலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்காரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக் கேட்டான். கேட்டான்... கேட்டானா?...அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று, "அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை, பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு... உண்டுங்களா?" என்று திணறினான் போலீஸ்காரன்.

கதையின் முதல் பக்கத்தில் அமைக்கப்படும் முரண்பாடு,
  • வாசகரைக் கதைக்குள் ஈர்க்கும் விதத்தில் அமையவேண்டும்.
  • ’என்ன ஆச்சோ?’ என்று கதைக்குள் நுழைந்து பார்க்கச் செய்வதாய் இருக்கவேண்டும்.
  • கதை எதைப் பற்றியது என்று ஓரளவுக்கு உணர்த்தும் வகையில் இருக்கவேண்டும்.
  • சில சமயம் கதையின் முதல் வரிகளிலேயே முரண்பாடு அமையும்: மேலுள்ள ஜானகிராமனின் அதிர்வு சிறுகதையில் உள்ளது போல.
  • அல்லது ஒரு விவரமான பீடிகையுதன் தொடங்கிக் கதைக்குள் வரலாம்: சுஜாதாவின் இரண்டணா சிறுகதை போல.

முரண்பாடு வகைகள்

முரண்பாடுகளைப் பொதுவாக இப்படிப் பாகுபடுத்தலாம்:
  • மனிதன்-மனிதன் முரண்பாடு
  • மனிதன்-இயற்கை முரண்பாடு
  • மனிதன்-கடவுள் முரண்பாடு
  • மனிதன் தனக்குள் முரண்பாடு
  • மனிதன்-சமூகம் முரண்பாடு
  • மனிதன்-இயந்திரம் முரண்பாடு
சிறுகதையின் முரண்பாடு
  • தொடக்கத்திலேயே ஏற்படுத்தப்படுகிறது.
  • கதையோட்டத்தில் விரிக்கப்படுகிறது.
  • ஓர் உச்ச நெருக்கடி நிலையை அடைகிறது.
  • கடைசியில் தீர்வு காணப்படுகிறது.
கதையின் முரண்பாடு, உச்ச நெருக்கடி, இறுதித் தீர்வு மூன்றும் கதையின் முக்கிய பாத்திரத்திற்கே நிகழ்கின்றன. இந்த முரண்பாடு முக்கிய பாத்திரத்திற்கு ஏற்படுமாறு ஓர் எதிர்ப் பாத்திரமாக இன்னொரு மனிதனோ, இயற்கையோ, கடவுளோ, மனமோ, சமூகமோ அல்லது இயந்திரத் தொழில்நுட்பமோ அமைகிறது.

முக்கிய பாத்திரம் முரண்பாட்டைத் தீர்க்கச் செயல்படுகிறது. எதிர்பாத்திரம் தடைகளை உருவாக்குகிறது. இத்தகைய வினை-எதிர்வினை நிகழ்வுகளின் சாத்தியங்கள் வாசகரை ஈர்த்து, அவர் கதையில் தோய்ந்து தன்னை முக்கிய பாத்திரத்துடன் இணைத்துக் கொள்ளுமாறு செய்கிறது.

முரண்பாடு வகைகளுக்கு உதாரணங்கள்

மனிதன்-மனிதன் முரண்பாடு

நாடியது கேட்கின்...
குருநாதன் ரமணி

நான் முத்துவேல். என் நண்பன் மனோகரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள், அதுதான் ஆச்சரியம்!

ஏனெனில் நான் (மனோகரன் மூடநம்பிக்கைகள் என்று மறுக்கும்) அனைத்து ஆன்மிக விஷயங்களையும் நம்புபவன்: எனக்குக் கோவில் ஸ்தல புராணங்கள், சாயி பாபா போன்ற மகான்கள் நிகழ்த்தும் அதிசயங்கள், பேய்-பிசாசுகள் பிடிப்பது அவற்றை ஓட்டுவது, மந்திரித்து வைத்தியம் செய்வது, மறுபிறவி--இன்னும் எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்ற அனைத்து விஷயங்களும் உண்மை.

மனோகரனுக்கோ ஒரு நியூட்டன், ஒரு ஐன்ஸ்டின், ஒரு ஸ்டீஃபன் ஹாகிங்--இன்னும் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்று யாரவது உறுதிப்படுத்தி யிருந்தால்தான் அது உண்மை, அறிவியல், நிச்சயம் நம்பலாம். எல்லாத் துறைகளிலும் பற்பல விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கருத்துக்களைச் சொல்கிறார்களே மனோ, இவற்றில் எதுதான் உண்மை என்று கேட்டால் ஜகா வாங்கிவிடுவான்! காலம் காலமாக நிறுவப்பட்டதாகக் கருதப் பட்ட விஞ்ஞான் உண்மைகள் ஒரு நாள் தூக்கியெறியப் படுவதே விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அவன் கட்சி.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க முடிவுசெய்தோம்!

மனிதன்-இயற்கை முரண்பாடு

உயிர்
கந்தர்வன்

ஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாக.

...

திமிங்கலம் ஒதுங்கிய மூன்றாம் நாள்தான் அவன் குடும்பத்தோடு தீவுக்குப் பயணமானான் புறப்படுமுன் இரண்டு நாளாய்ப் பிள்ளைகள் விடிந்து எழுந்ததும் திமிங்கலம் குறித்து கூடிக் கூடி உட்கார்ந்து கற்பனையும் பேத்தல்களுமாய் வாயொழுகப் பேசித் திரிந்ததை அவள் அடிக்கடி பார்த்துவிட்டு வாய் பொத்தித் திரும்பிக்கொண்டு சிரித்து வைத்தாள்.

மனிதன்-கடவுள் முரண்பாடு

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
புதுமைப்பித்தன்

மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ’பிராட்வே’யும் ’எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

...

இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.

திடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, "இந்தா, பிடி வரத்தை" என்று வற்புறுத்தவில்லை.

"ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?" என்று தான் கேட்டார்.

மனிதன்-தனக்குள் முரண்பாடு

சதுப்பு நிலம்
எம்.ஏ. நுஃமான்

அவனுக்குச் `சுரீர்’ என்றது. தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்துவிட்டதைக் கண்டதும் அவன் கண்கள் உயர்த்தி மேலே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு தனது மணிக்கூட்டையும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னைப்பற்றி அவள் பிழையாக நினைக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அந்த நினைப்பு அவனைச் சுட்டது. அவள் அவ்வாறு நினையாமலும் இருக்கலாம். அவளுக்கும் என்னைப் பார்ப்பதில் ஒரு கவர்ச்சி உண்டாகி இருக்கலாம். நான் அவளைப் பார்த்ததனால் கவர்ச்சிகொண்டு அவள் மீண்டும் என்னைப் பார்க்கக்கூடும் என்றெல்லாம் அவன் நினைத்தான்.

மனிதன்-சமூகம் முரண்பாடு

காடன் கண்டது
பிரமிள்

நான் கும்புட்டேன். "என்னை உடுங்க சாமி"ன்னேன்.

"சொன்னவங்ககிட்டே போய் சொல்லுடா, கபர்தார்னு சொல்லு."

"சரி சாமி"ன்னேன். அப்புறமா ஆரு சொன்னவன்ங்கறாங்க. ஆருமில்லீங்க, நானு பார்த்தேனுங்கன்னேன். பேச்சை மாத்திட்டாங்க.

"நீங்க ஏண்டா ஓணான், நாயி, பூனையைத் திங்கிறீங்க? ஆடு மாடு இல்லியா?"

"அதுக்கேதுங்க பைசா?"ன்னேன்.

கொஞ்ச நேரம் பேச்சில்லே, அப்புறம் மெதுவா கேள்வி. "நீ எப்படா கடேசி வாட்டி மலைக்காடு பக்கமாய் போனே? யார்றா மலைக்காட்டுக்குப் போறவன் வாறவன்? சுக்கானுக்கு யார்றா மலைக் காட்லேருந்து வந்து கஞ்சா பத்திரம் சப்ளை பண்றவன்?"

சுக்கான், பத்திரம், அது இதுன்னதும் - நல்ல பாம்பைப் புடிக்கறதுக்கு சாரைப் பாம்பு விடறாங்கடா காடான்னு உஷாராயிட்டேன்.

"சுக்கான் நல்லபாம்புத் தோலை வித்து வயத்தைக் களுவுற பாவி சாமி. எங்களுக்கு இப்பல்லாம் பாடேதுங்க? எங்காவது வயலிலே வரப்பிலே பாம்பைப் புடிச்சாதாஞ் சாமி"ன்னு கும்புட்டேன்.

"எலக்சனுக்கு நில்லுடா. ஓட் போடுவான், அப்புறம் நாட்டை எல்லாம் காடா மாத்துடா. போடா! போயி கரப்பான் பூச்சியைத் துண்ணுடா"ங்கறாரு ஏட்டு.

மனிதன்-இயந்திரம் முரண்பாடு

ஜில்லு
சுஜாதா

ஜன்னலுக்கு வெளியே தொடுவானத்தில் ஒரே ஒரு மேகம் கருப்புத் தீற்றலாகத் தெரிந்தது.ஆத்மா கதவைச் சார்த்தினான். வரப்போகிறது. தெரிந்துவிட்டது. அவர்கள் கணக்குப்படி சாயங்காலம் மழை வந்து விடும். அதற்குள் புறப்பட்டுவிட வேண்டும்.

திரும்பினான். நித்யா பெட்டியில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள்.

"சீக்கிரம் நித்யா!"

"எதை எடுத்துக்கறது எதை விடறது?"

"மொத்தமே மூணு பேருக்கும் எட்டு கிலோதான். ரொம்ப அவசியமானதை மட்டும் எடுத்துக்க"

"அவசியமானதுங்கறது எது?"

அந்த கேள்விக்கு இந்த சந்தர்ப்பத்தில் ’மூச்சு’ என்பதைத் தவிர ஆத்மாவிடம் வேறு பதில் இல்லை .

முரண்பாடு அமைக்க உத்திகள்

கதையின் முரண்பாடு சரியாக அமையவும் விரியவும் கீழ்வரும் உத்திகள் பயன்படும்.

01. உறுதியான, வலியுறுத்தும் நெருக்கடி, விழைவு

02. விழைவு-விளைவுகள் பற்றி வாசகர் பரிச்சயம்

03. ஏன் இந்த விழைவு என்பதன் செய்தி

04. விழைவு நிகழ, நிகழாமல் இருக்க என்று இருவித சாத்தியங்கள்

05. விழைவை முயல்வதில் உருவாகும் பற்பல, விதவிதமான தடைகள்

06. விளைவுகளுக்குப் பாத்திரங்கள் பொறுப்பேற்றல்

07. வாசகர் ஊகிக்க முடியாது வியப்புறும் வண்ணம் கதை நிகழ்வுகள்

08. முக்கிய பாத்திரத்துடன் வாசகர் ஒன்றுதல்

09. மனித இயல்பின் ஒரு கூறினை வெளிப்படுத்துதல்

10. கதை ஓர் இடம்-காலம் சார்ந்ததாகினும் போராட்டம் எல்லோர்க்கும் பொதுவானதாக அமைதல்

*** *** ***